 |
| இந்த பூவை நம்ம கட்சி தொண்டர்களின் காதில் வச்சுக்க சொல்லுன்னு ஜெயலலிதா சொல்றாரோ |
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, யாரும் எதிர்பாராத திருப்பமாக தன் உடன்பிறவா சகோதரியும் உயிர்தோழியுமாக விளங்கிய சசிகலாவை கட்சியிலிருந்தும், போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியேற்றினார் ஜெயலலிதா. இதற்கு முன்பு 1996-ஆம் ஆண்டு படுதோல்விக்கு பின் ஒரு முறை சசிகலா வெளியேற்றம் நடந்திருந்தாலும் இப்படி ஒரு விளைவுகளை சந்தித்ததில்லை சசி.
தன் கணவர் நடராஜன் உள்ளிட்ட அனைத்து உறவினர்களையும் சசியோடு சேர்த்து வெளியேற்றியதோடு மட்டுமல்லாமல், சிலர் மீது நடவடிக்கையும் பாய்ந்தது. இதெல்லாம் வெறும் கண் துடைப்பு என்று சிலராலும், இல்லை இல்லை நிஜமாகவே இந்த நடவடிக்கை உண்மைதான் என்றும் சிலராலும் பேசப்பட்டது.
பி.ஹெச்.பாண்டியனைப்போல் அண்ணா.தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் சிலரும் சசிகலாவை விமர்சித்து பேசியிருந்தனர்.
நானும் இது பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன்.ஆனால், மீண்டும் ஜெயலலிதாவுடன் சசிகலா சேரும் அறிகுறிகள் தற்போது தென்பட துவங்கியுள்ளது. இன்று சசிகலா ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்.....
1984ம் ஆண்டில் முதன் முதலாக முதலமைச்சர் ஜெயலலிதாவை நான் சந்தித்தேன். அதன் பின்னர் எங்களுடைய நட்பு வளர்ந்து, அவரும் என்னை தன் தங்கையாக ஏற்றுக்கொண்டார். 1988-ம் ஆண்டிலிருந்து அக்காவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே அவருடன் வசித்து வந்தேன்.
அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இரவு, பகல் என பாராமல் கடுமையாக உழைத்து வந்த ஜெயலலிதாவின் பணிச் சுமையை ஓரளவிற்காவது குறைக்க அவருக்கு உதவியாக இருந்து, என்னால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேனே தவிர, வேறு எந்தவித எண்ணங்களும் எனக்கில்லை.
போயஸ் கார்டன் இல்லத்தில் முதலமைச்சருடன் இருந்தவரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவிற்குத்தான் எனக்குத் தெரிந்ததே தவிர, முழு விவரமும் தெரியவில்லை.
24 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நான், கடந்த டிசம்பர் மாதம் முதலமைச்சரை பிரிந்து அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவான பின்னர்தான், நடந்த உண்மைகள் முழுமையாக எனக்குத் தெரியவந்தது.
கடந்த டிசம்பர் மாதம் முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சில ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பிறகு தான், அதற்கு என்ன காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியவந்தது.
என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விருப்பத் தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டடது என்பதையும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கே எதிரான சில சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது, நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன்.
இவையெல்லாம் எனக்கே தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை.
சந்தித்த நாள் முதல் இன்றுவரை, முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக இருக்க வேண்டும் என்றே ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர, கனவிலும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நான் துரோகம் நினைத்ததில்லை.
என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு, முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். முலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள் தான்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவருக்குத் துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்துவிட்டேன். துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை. உறவுமில்லை.
என்னைப் பொறுத்தவரை, அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்குத் துளியும் ஆசையில்லை.
பொதுவாழ்வில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பமே எனக்கில்லை. அக்காவிற்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவிற்கு அர்ப்பணித்துவிட்டேன்.
இனியும், எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவிற்குப் பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன். என்று உருக்கமாக சொல்லியுள்ளார். ஆக, சசிகலா வெள்ளைக்கொடி காட்டிவிட்டார். இதற்கு ஜெயலலிதா பச்சைக்கொடி காட்டியுள்ளார். எப்படித்தெரியுமா?
தன் ஜெயா டி.வி.யில், இந்த அறிக்கையை ஃப்ளாஷ் நியூசாக ஓடவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் அனுமதியில்லாமல், இந்த அறிக்கையை ஜெயா டி.வி.யில் வெளியிட முடியுமா? அவரின் ஒப்புதலுடன் தான் வெளியிட்டிருக்கமுடியும். அப்படியானால், ஜெயா பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்றுதானே அர்த்தம்.